எளிய உவமைகள் மூலம் ஸ்ரீராமகிருஷ்ணர் அருளிய அறிவுரைகள்-6
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இந்த உலகம் ஒரு செயல்களம். செயல் புரிந்து கொண்டே சென்றால் ஞானம் உதிக்கிறது. இந்தக் காரியங்களைச் செய், இவைகளேச்செய்யாதே” என்று குரு உபதேசிக்கிறார். பற்றின்றி பணி செய்யுமாறு கூறுகிறார். வேலை செய்யச் செய்ய மனத்தில் உள்ள மாசுகள் மறைகின்றன. நல்ல டாக்டர் வாய்த்து விட்டால், அவர் தரும் மருந்தை உட்கொள்ள உட்கொள்ள, நோய் நீக்கி, நாளடைவில் குணமடைவது போன்றது இது.
கடவுள் நம்மை ஏன் உலக வாழ்க்கையிலிருந்து விடு விக்கவில்லை? நோய் குணமடையும் போது விடுவிப்பார். காமினீ- காஞ்சனத்தை அனுபவிப்பதில் நாட்டம் மறையும் போது விடுவிப்பார்.ஆஸ்பத்திரியில் பெயரைப் பதிவு செய்து விட்டால் ஓடிப்போக முடியாது. நோய் கட்டுப்பாட்டிற்குள் வராமல் டாக்டர் விடுவிக்க மாட்டார்.
இப்போதெல்லாம் குருதேவர் யசோதையைப்போல் வாத்சல்ய பாவனையில் மூழ்கியிருந்தார். ஆகவே ராக்காலைத் தம்முடன் வைத்துக்கொண்டிருந்தார்.ராக்காலும் குருதேவரிடம் இருக்கும்போது, ஒரு சின்னஞ்சிறு குழந்தை தன் தாயிடம் எப்படி இருக்குமோ அப்படி இருப்பார். குழந்தை பால் குடிக்க தாயின் மடி மீது சாய்ந்து உட்கார்ந்து கொள்வது போல் ராக்காலும் குருதேவரது மடி மீது சாய்ந்து உட்கார்ந்து கொள்வார்.
இவ்வாறு அந்த பாவனையில் குருதேவர் அமர்ந்திருந்த போது, ஒரு பக்தர் வந்து கங்கையில் நீரேற்றம் ஏற்பட்டிருப்பதைக் கூறினார். அதைக்கேட்டதும் குருதேவர், ராக்கால் ம-முதலிய அனைவரும் அதைக் காண பஞ்சவடிக்கு விரைந்தனர். காலை 10.30 மணி இருக்கும். அந்த நீரேற்றத்தில் ஒரு படகு சிக்கிக் கொண்டது. அதைக் கண்ட குருதேவர், ஓ! அதோ பார்! அந்தச் சிறிய படகின் நிலைமையைப் பார், என்ன நேருமோ? என்று கூறினார்.
பிறகு எல்லோரும் வழியில் பஞ்சவடியில் உட்கார்ந்தனர்.
ஸ்ரீராமகிருஷ்ணர்-
(ம-விடம்)- ஆமாம், நீரேற்றம் எப்படி ஏற்படுகிறது?
ம- தரையில் சூரியன், சந்திரன், பூமி இவற்றின் படம் வரைந்து , புவி யீர்ப்பு விசை, நீரேற்றம்- நீரிறக்கம் அமாவாசை, பௌர்ணமி, கிரகணம் முதலியவற்றை விளக்கத் தொடங்கினார்.
சிறிது நேரம் ம- சொல்வதைக்கேட்டுக் கொண்டிருந்த குருதேவர், நிறுத்து, எனக்கு ஒன்றும் புரியவில்லை. தலை சுற்றுகிறது. சுள் சுள்ளென்று குத்துகிறது. ஆமாம்,
இப்படி தொலைவிலுள்ள சமாசாரங்களை எல்லாம் எப்படி தெரிந்து கொள்கிறார்கள்?
சிறு வயதில் நான் நன்றாகப் படம் வரைவேன்.ஆனால் எண் சுவடியை எடுத்தாலே தலை சுற்றும், கணக்குப்போட எனக்குக் கொஞ்சமும் வராது.
இவ்வாறு கூறிக் கொண்டே குருதேவர் தமது அறைக்குத் திரும்பினார். அங்கு சுவர் மீது மாட்டப் பட்டிருந்த யசோதையின் படத்தைப் பார்த்து விட்டு, படம் நன்றாக இல்லை. ஒரு பூக்காரியைப்போல் யசோதையை வரைந்திருக்கிறார்கள் என்று கூறினார்.
பகலுணர்விற்குப் பிறகு குருதேவர் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டார்அதரும் மற்ற பக்தர்களும் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர். அதர் சேன் குருதேவரைப் பார்க்க வருவது இதுவே முதல் தடவை. அவரது வீடு கல்கத்தாவில் பேனேடோலாவில் உள்ளது. அவர் துணை நீதிபதியாக இருந்தார். வயது இருபத்தொன்பது முப்பது இருக்கும்.
அதர்(ஸ்ரீராமகிருஷ்ணரிடம்)-
சுவாமி, நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். உயிர்ப்பலி நல்லதா? இது உயிர்களைத் துன்புறுத்துவது ஆகாதா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
சிலவிசேஷ காலங்களில் பலியிடுவதை சாஸ்திரம் அனுமதிக்கிறது. சாஸ்திரம் அனுமதிக்கின்ற காலங்களில் பலியிடுவதில் குற்றமில்லை. அஷ்டமிதிதியில் ஆடு பலியிடுவது போல். ஆனால் எல்லா காலங்களிலும் கூடாது. எனது இப்போதைய நிலையில், பலியிடுவதை என்னால் நின்று பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பிரசாத மாமிசத்தை உண்ணவும் முடிவதில்லை. தேவி கோபித்துக்கொள்ளக் கூடாதே என்ற பயம் காரணமாக, அதைக்கையால் தொட்டு தலையில் வைத்துக்கொள்கிறேன்.
எல்லா உயிர்களிலும், எறும்பிலும் இறைவனைக் காணும் நிலையும் சில வேளைகளில் எனக்கு வருவதுண்டு. இந்த நிலையில், ஏதாவது ஒரு பிராணி இறப்பதைக் கண்டால், அதன் உடல் தான் அழிந்தது என்று ஆறுதல் ஏற்படுகிறது. ஆன்மாவிற்கு ப் பிறப்பு இறப்பு இல்லை.
அதிக ஆராய்ச்சி நல்லதல்ல, அன்னையின் பாத கமலங்களில் பக்தி இருக்குமானால் அது வே பேர்தம். அதிக ஆராய்ச்சி குழப்பத்தையே உண்டாக்கும். குளத்தின் மேல் மட்டத்திலுள்ள தண்ணீரைக்குடி, அது தூய்மையாக இருக்கும். அடி மட்டத்தில் கையைவிட்டுக் கலக்கினால் தண்ணீர் கலங்கிவிடும். எனவே அவளிடம் பக்திக்காகப் பிரார்த்தனை செய்.
துருவனுடைய பக்திக்குப் பின்னால் ஆசை இருந்தது. நாட்டை அடைவதற்காக அவன் தவம் செய்தான். ஆனால் பிரகலாதனுடைய பக்தி ஆசை இல்லாதது, பலன் கருதாதது.
பக்தர்-
சுவாமி, இறைவனை அடைவது எப்படி?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
இந்த பக்தியின் வழியாகத் தான், நீ காட்சி தராவிட்டால் என் கழுத்தை வெட்டிக் கொள்வேன். என்று இறைவனை வற்புறுத்த வேண்டும். இது தமோ குண பக்தி.
பக்தர்-
கடவுளைக் காண முடியுமா?
ஸ்ரீராமகிருஷ்ணர்-
ஆம், கட்டாயமாகக் காணலாம். அருவம், உருவம் இரண்டு நிலைகளையும் காணலாம். உருவக் கடவுளை உணர்வோடு கூடியவராகக்காணலாம். மேலும் மனித வடிவிலும் அவரைப் பிரத்தியட்சமாகக் காண முடியும். எப்படி யெனில் அவதார புருஷரைக் காண்பது ஆண்டவனையே காண்பதாகும். யுகந்தோறும் கடவுள் மனித வடிவில் தோன்றுகிறார்.
Пікірлер: 7
Aum
நன்றிகள் சுவாமி ஜி....மனம் தெளிவு பெறுகிறது....
ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்ஸரேநமக:🙏🙏🙏👌🙏🙏🙏🙏
Super 🙏🙏🙏
Aathmaarththa magizhvu yennul! Pathivukku nanrigal!
Jai Sri Ramakrishna
🙏🙏🙏